ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோவில் பகுதியில் ஓடைகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய பக்தர்கள் : 50-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்
Nov 10 2019 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோவில் பகுதியில் உள்ள ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஓடையை கடக்க முடியாமல் சிக்கித் தவித்த 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பெய்த கனமழையின் காரணமாக கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் கீழே இறங்கி வந்த போது சுமார் 50 க்கும் மேற்பட்டோர் சங்கிலிப் பாறை ஓடையை கடக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், 50க்கும் மேற்பட்ட பக்தர்களை 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பத்திரமாக மீட்டனர்.