திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு - புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியை காண குவியும் பக்தர்கள்
Oct 8 2019 2:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்றிரவு, உற்சவர் மலையப்ப சுவாமியின் குதிரை வாகன சேவை, கோயில் மாட வீதிகளில் நடைபெற்றது. வாகன மண்டபத்தில் கல்கி அவதார திருக்கோலம் பூண்டு, தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்ப சுவாமிக்கு, சர்வ திருவாபரண சமர்ப்பணம், தூப தீப நைவேத்தியம் ஆகியவை நடத்தப்பட்டன. அங்கிருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக உற்சவம் கண்டருளிய மலையப்பசுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலையப்ப சுவாமியின் குதிரை வாகன சேவையை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான இன்று, திருமலை கோயிலுக்கு அருகிலுள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதன் பின்னர் இரவு 7 மணிக்கு தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த கருட கொடி இறக்கப்படுவதுடன், விழா நிறைவு பெறுகிறது.