விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் விநாயகர் சிலை ஊர்வலமும் நடைபெற்றது.
நாகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 12 வாகனங்களில் பல்வேறு விநாயகர் சிலைகள் பின்தொடர, மேளதாளம் முழங்க தப்பாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் ஆகிய கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன், ஊர்வலம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுககுப் பிறகு, நாகை நீலாயதாட்சியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம், நாகூர் வெட்டாற்றிற்கு சென்றடைந்தது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், நவல்பட்டு, அரியமங்கலம், பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர். திருவெறும்பூர் அருகே நவல்பட்டு போலீஸ் காலனியில், விநாயகர் சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காண்போரை பெரிதும் கவர்ந்தது. இதனைத்தொடர்ந்து விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கணக்கு விநாயகர் கோவில், பெரிய அரண்மனை சக்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களில் 5 அடி முதல் 20 அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம், சேர்ப்பாபட்டு கிராமத்தில், 15 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கொழுக்கட்டை, பழம் உள்ளிட்டவை படைக்கப்பட்டது. மேலும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.ம.மு.க சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூரில் சாமி உருவங்கள் கொண்ட முளைப்பாரியை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். வீரபாண்டி அருகே குப்பாண்டம்பாளையம் பகுதியில், களிமண், காட்டுமொச்சை குச்சி, கம்பு, குதிரைவாலி, மொச்சைசப்பயறு ஆகியவற்றை பயன்படுத்தி விநாயகர் சிலை, கருப்பசாமி சிலை, அம்மன் சிலைகள் என மொத்தம் 11 விதமான சாமி சிலைகளை வடிவமைத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பெண்கள் கும்மியடித்தும், பாட்டு பாடியும் வழிபட்டனர். முளைப்பாரி விநாயகர், அம்மன், கருப்பசாமி உள்ளிட்ட 11 சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.