மழை வேண்டி பல்வேறு கோயில்கள் சிறப்பு வழிபாடு : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்
Aug 19 2019 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் ஆதிபராசக்தி ஆலயத்தில், உலக நன்மை வேண்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கஞ்சி கலையம் சுமந்து ஊர்வலம் வந்தனர்.
திருவாரூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலயத்தில், ஆடிபூர வழிபாட்டையொட்டி, அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் வழிபாடு நேற்று நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், மழை பெய்யவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாடை அணிந்து, கஞ்சி கலையம் சுமந்து ஊர்வலம் வந்தனர். 4 ராஜ வீதிகளில் ஊர்வலகமாக வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரையில் உள்ள ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மஹோத்ஸவம் விழா வெகு விமரிசையாக நடைப்பெற்றது. மழை பெய்யவும், நாட்டு மக்கள் ஆரோக்கியம் மற்றும் செல்வ செழிப்புடன் வாழவும் நடைபெற்ற இந்த வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயிலில், மழை வேண்டி வருண ஜெபம் நடைபெற்றது. காலசாந்தி, திருவனந்தல் உள்ளிட்ட பூஜைகளுக்கு பின்னர், கணபதி பூஜை, கோபூஜை போன்றவை நடைபெற்றன. பின்னர் தெப்பத்துக்கு அருகே உள்ள வசந்த மண்டபத்தில், தொடர் வருண ஜெபம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள், நீர் நிரம்பிய அண்டாக்களில் அமர்ந்து வருண ஜெபம் செய்தனர்.
இதனிடையே, நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில், ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு வடை மாலை அலங்காரம் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதனையடுத்து தங்கதேர் இழுக்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.