தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெற்ற வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வசந்த உற்சவ நிறைவு திருவிழாவை முன்னிட்டு, சுவாமிகள் மாடவீதி உலா மற்றும் திருநடனம் சிறப்பாக நடைபெற்றன. வாத்திய கருவிகள் இசைக்க, கோவில் வளாகத்தில் சுவாமிகள் உலா வந்த பின், வசந்த தீர்த்த குளத்தை சுற்றி, ஒருமுறை திருநடனம் புரிந்தார். வடிவுடையம்மன் உற்சவ தாயார், தென் திசையில் எழுந்தருள, தியாகராஜர் வட திசையில் எதிர்சேவை புரிந்து, திருநடனமாடினார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள திருவெங்கனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் 25-ம் ஆண்டு பால்குட திருவிழாவையொட்டி, கொள்ளிடம் ஆற்றிலிருந்து பால்குடம், பால்காவடி, தீ சட்டி மற்றும் அலகு போட்டு, கிராம கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கையுடன் வீதிகளில் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். இரவு, அம்மன் வீதியுலா காட்சியும், வாணவேடிக்கை மற்றும் கிராமிய கரகாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டம், பெரியக்குத்தகையில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவிலில் ஆண்டு வைகாசி கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் பெண் பக்தர்கள் கற்பூர காவடி எடுத்து பிரார்த்தனை செய்தனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பிரசன்ன சின்ன மாரியம்மன் கோவிலில் 60-ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி, சக்தி கரகம் மற்றும் காப்பு கட்டிய பக்தர்கள், காவிரிக்கரையில் இருந்து புறப்பட்டு, வீதியுலாவாக கோயிலை வந்தடைந்தனர். கோயிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில், சில பக்தர்கள், 20 அடி நீள அலகை வாயில் குத்தி தீமிதித்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.
நெல்லை மாவட்டம், தென்காசி அருகே மழை வேண்டி, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் தேவாரம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமம், திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய மேகராக குறிஞ்சிப் பண்ணில் பாடிய தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் ஊர்காவல் தெய்வமாக விளங்கும் நெல்லை டவுண் புட்டாபிரத்தி அம்மன் திருக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா, வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.