திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றம் : திரளான பக்தர்கள் வழிபாடு
Apr 26 2019 1:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் சித்திரைத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், சித்திரை தேர் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு தேர் வந்தடைந்தது. அப்போது, மேஷ லக்னத்தில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை வழிபட்டனர். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் மே 3ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருள திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. வண்ணமயமாய் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்ச வாத்தியங்கள் முழங்க, பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தளி ரோடு, குட்டைதிடல் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நிலையை அடைந்தது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் விழுந்தமாவடி மழைமுத்து மாரியம்மன் ஆலயத்தில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு மேற்கொண்டனர். கன்னிதோப்பு சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து பால்குட ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு, ஆலயத்தை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு புனித மகிமை மாதா திருக்கோயிலின் 504-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. மயிலை கிறிஸ்தவ மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி பங்கேற்று, ஆலய கொடிமரத்தில் புனித அன்னை மகிமை மாதாவின் திருவுருவம் பொறித்த கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதனையடுத்து, தேவாலயத்தில் கூட்டு திருப்பலியும், இலங்கையில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ பெருமக்கள் பங்கேற்றனர்.