கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டம் - ஆயிரக்கணக்கான திருநங்கைகளும், பொதுமக்களும் பங்கேற்று வழிபாடு
Apr 17 2019 5:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டத்தில், திருநங்கைகள் தாலி அறுத்து விதவைக் கோலம் பூண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில், தமிழகம் மட்டுமின்றி கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா, கனடா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் குவிந்துள்ளனர். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலிக் கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி கூத்தாண்டவர் கோயிலில் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
இதனையொட்டி ஏராளமான திருநங்கைகள் பட்டு சேலை உடுத்தி, தங்க நகைகளை அணிந்து மணப்பெண்ணைப் போல அலங்கரித்து கொண்டு கூத்தாண்டவர் சாமியே தங்களுக்கு தாலிக் கட்டுவதாக நினைத்து கோயில் பூசாரிகளிடம் தாலிக் கட்டிக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து கூத்தாண்டவருக்கு மனைவியானதை நினைத்து கும்மியடித்து, பாட்டுப்பாடி திருநங்கைகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக கூத்தாண்டவர் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அதில் திருநங்கைகள் தாலி அறுத்து விதவைக்கோலம் பூண்டு, கூத்தாண்டவரை வழிபட்டனர்.