தமிழகத்தின் முக்கிய திருக்கோயில்களில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக முதுகில் எலுமிச்சை பழங்களும், உடல் முழுவதும் வண்ணப்பொடிகளை பூசிக்கொண்டு, பம்பை மேளத்துடன் ஊர்வலமாகச் சென்று, ஈசானிய மைதானத்தை அடைந்தபோது, மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திளரனா பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் தீத்தாம்பட்டி ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் பாரிவேட்டை மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் இருந்து 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிங்க வாகனத்தில் ஊர்வலமாக மயானத்திற்கு செல்லும் வைபவம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் காளி வேடம் அணிந்து நடனமாடியபடி சென்றனர்.
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே முடிதிருச்சம்பள்ளியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. மயான கொள்ளையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கிழங்கு வகைகள், நவதானிய வகைகள் வைக்கப்பட்டிருந்தன. தீபாராதனைக்கு பிறகு பக்தர்கள் பேச்சாயி வேடமணிந்து கிழங்கை கொள்ளை விடும் நிகழச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. அம்மனுக்கு படைத்த பழங்கள், கிழங்கு உள்ளிட்டவற்றை பக்தர்கள் உண்டு வழிபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கரடிகுடி பகுதியில் மிகப் பழமையான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மயானக்கொள்ளை உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தாய் கரகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனிடையே, திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே நிலையம் பகுதியில் பத்தாம் ஆண்டாக சிவன் - பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்தனர்.
திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு திருமஞ்சனம், திருக்கல்யாண வேள்வி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள ஒச்சாண்டம்மன் திருக்கோவிலில், உசிலம்பட்டி பகுதியிலுள்ள 58 கிராம மக்கள் இணைந்து கொண்டாடும் மாசிப்பச்சை எனப்படும் மகா சிவராத்திரி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். திருவிழாவின் 3ம் நாளான நேற்று கோவில் பூசாரிகள் ஆணிச் செருப்பின் மீது நடந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.