ராகு-கேது பெயர்ச்சி : தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள்
Feb 14 2019 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோயிலில் உள்ள ராகு-கேது பகவான் சன்னதியில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நமச்சிவாயர் திருக்கோயிலில் ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
நாகை மாவட்டம் நாகூரில் கேது பகவான் பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து ஸ்ரீகேது பகவான் சன்னதியை அடைந்தது. கேது பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
திருச்சி உறையூர் குங்குமவல்லி உடனுறை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ராகு பகவான் மற்றும் கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. ராகு பகவானுக்கு மிளகும், கேது பகவானுக்கு கொள்ளும் சாற்றி திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசொர்ணாம்பிகை சமேத ஸ்ரீசங்கமேஸ்வரர் திருக்கோவிலில் ராகு-கேது பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராகு - கேது பெயர்ச்சினை முன்னிட்டு, கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.
கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி நிகழ்ச்சியினை தொடர்ந்து, ஒதுவார் பக்தி பாடல்களை பாடினர். இதையடுத்து மகாதீபாராதனை நடைபெற்றது.
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ நாகதேவதை அம்மன் ஆலயத்தில் இராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பரிகாரம் செய்து வழிபட்டனர்.
காஞ்சிபுரம் செவிலிமேடு ஏரிக்கரை பகுதியில் உள்ள ராகு கேது பரிகார தலமான ஸ்ரீ காமாக்ஷி அம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோவிலில், ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. ராகு, கேது பகவான்களுக்கு பால், தயிர், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.