திருமக்கோட்டை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
Jan 28 2019 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மன்னார்குடி அருகே மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் உள்ள மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. அதன் நிறைவாக நேற்று 4 நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மகாமாரியம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் நேற்று மகாசுதர்சன ஹோமம் நடைபெற்றது. வேதவிற்பன்னர்களைக் கொண்டு உலக நன்மைக்காகவும் மக்கள் நலம்பெற்று, மகிழ்ச்சியுற வாழ வேண்டியும் வேள்வி நடைபெற்றது. பின்னர் பூஜிக்கப்பட்ட கலசங்களை வேதவிற்பன்னர்கள் ஊர்வலமாக கொண்டுசென்று சுதர்சன பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சடைக்கன்பட்டி கிராமத்தில் சந்திரசேகர் விநாயகர் திருக்கோவில், புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. குடமுழுக்கு விழாவானது கடந்த 25-ந் தேதி விக்னேஸ்வர பூஜையோடு தொடங்கியது. தொடர்ந்து கும்ப அலங்காரம், யாகசாலை பூஜை மற்றும் யாக வேள்வி நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ள புனித செபஸ்தியர் தேவாலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து புனிதரின் நவ நாள் ஜெபம், சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புனிதர் செபஸ்தியரின் திருஉருவ திருவீதி ஊர்வலம் தேவாலயத்திலிருந்து தொடங்கி பல்வேறு சாலைகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலத்தில் செண்டை வாத்தியங்கள், பேண்ட் வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இரவு வர்ண ஜால வாணவேடிக்கையும் நடைப்பெற்றது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், தென்தாரை பெரியகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பக்தர்கள் பூவோடு எடுத்தும் மற்றும் அலகு குத்தியும், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பண்டிகையின் நிறைவாக, தென்தாரை பகுதியைச் சார்ந்த அனைத்து சமுதாய மக்கள் சார்பில், தீர்த்தம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தாராபுரம் அமராவதி ஆற்றில், தீர்த்தம் எடுத்து பூஜைகள் செய்தனர். பின்னர் தீர்த்த ஊர்வலம் நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.