திருவண்ணாமலை அருணாச்சேலஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Nov 14 2018 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை தீபதிருநாளையொட்டி, திருவண்ணாமலை அருணாச்சேலஸ்வரர் கோயிலில், தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
திருவண்ணாமலை அருணாச்சேலஸ்வரர் கோயிலில், பௌர்ணமி நாளில், திருக்கார்த்திகை தீப திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து விடுவார்கள். அதன்படி, இந்தாண்டும், இவ்விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, திருவண்ணாமலையில், இன்று திரு கார்த்திகை தீப திருவிழா, 63 அடி உயர தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், விநாயகர், முருகன், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டன. உற்சவர்கள் தாண்டவம் ஆடிக்கொண்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதைத் தொடர்ந்து தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா வெகுவிமரிசையாக தொடங்கியது.
வரும் 23ம் தேதி, காலை 4.00 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில் கருவறை எதிரே பரணி தீபம் ஏற்றப்படவுள்ளது. அன்று மாலை 6.00 மணிக்கு, 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக, 6 அடி உயரமுள்ள, ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்றப்படும் மகா தீபம், 60 கிலோ மீட்டர் துாரம் வரை பக்தர்களால் காண முடியும்.