சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீது ஜனவரி 22-ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை - அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு
Nov 13 2018 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், மறு சீராய்வு மனுக்கள் மீது ஜனவரி 22 முதல் விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த பெண் பக்தர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் இந்து அமைப்பினரும், பாரதிய ஜனதா கட்சியினரும் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் பதற்றம் எழுந்தது. இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகள் சார்பில் 49 மறு சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இந்த மனுக்கள் குறித்து இன்று விசாரணை நடத்திய பின், இவற்றை ஏற்றுக்கொண்டு, வரும் ஜனவரி 22ம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என அறிவித்தது. மேலும், அனைத்து பெண்களையும் அனுமதித்து வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.