கோலாகலமாகத் தொடங்கிய திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி திருவிழா -பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தைத் தொடங்கினர்
Nov 8 2018 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற யாகசாலை பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டித் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முதலில் விஸ்வரூப தரிசனமும் பின்னர் உதயமார்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருள காலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது. கந்த சஷ்டி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி, வரும் 13ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. கந்தசஷ்டி திருவிழா தொடங்கியதை அடுத்து 6 நாட்களுக்கு கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இன்று காலை அங்குள்ள கடலில் புனித நீராடி விரதத்தைத் தொடங்கினர்.