நடை திறப்பையொட்டி போலீஸ் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது சபரிமலை - 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருப்பதால் மீண்டும் பதற்றம்
Nov 4 2018 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, நாளை திறக்கப்படவுள்ளதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை செயல்படுத்திய கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு இந்து அமைப்பினரும், ஐயப்ப பக்தர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கோயில் நடை 6 நாள்கள் திறந்திருந்தபோது, போலீஸ் பாதுகாப்புடன் சில பெண்கள் கோயிலுக்கு செல்ல முயன்றனர். எனினும், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கேரள அரசு கண்மூடித்தனமாக ஏராளமானோரை கைது செய்ததாக, கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த சூழலில், ஐயப்பன் கோயில் நடை, நாளை மாலை திறக்கப்பட்டு, நாளை மறுநாள் மாலை நடை சாத்தப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக, நிலக்கல், பம்பை மற்றும் ஐயப்பன் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.