ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் - மகா தீபாராதனை : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Oct 25 2018 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு சிவாலயங்களில் அன்னாபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று சந்திரன் தனது அமிர்த கலையான 16 கலைகளுடன் பூரண வலிமையுடன் விளங்குகிறான். இந்த நாளில் அறுவடையான புதுநெல்லைக் கொண்டு இறைவனுக்கு அமுதுபடைக்கும் விழா அன்னாபிஷேகமாகும். அதையொட்டி திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேசுவரி ஜம்புகேசுவரர் ஆலயத்தில் குபேரலிங்கேசுவரருக்கு சாதம் சாற்றப்பட்டு, காய்கறிகளைக் கொண்டும், பூக்களைக் கொண்டும் அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகாதீபாராதனையும் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயிலில், ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பெருவுடையாருக்கு 108 மூட்டை அரிசியை சமைத்து கூடையில் எடுத்துவந்து அன்னம் சாத்தப்பட்டது. மலர்கள் பழங்கள் காய்கறிகள் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன் பிறகு லிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சாதம் அருகிலுள்ள ஏரி குளங்களில் உள்ள மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோவிலில், அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட 508 கிலோ அரிசி சாதத்தால் வாலீஸ்வரருக்கு சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளுக்கு பிறகு அலங்கார மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. ஐப்பசி மாதத்தில் உள்ள பெளர்ணமியன்று சிவபெருமான் நமக்கு அன்னமாக காட்சி அளிப்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இந்த "அன்னாபிஷேக விழாவில் " திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஒரு டன் அரிசியினால் தயரிக்கப்பட்ட அன்னத்தினை கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி பஞ்சலிங்க கோலத்திலும் அம்மாள் 5 ஆயிரத்து 8 வளையல்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
வேலூர் கோட்டையிலுள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், அன்னாபிஷேகம் நடைபெற்றது. மூவருக்கு 150 மூட்டை அரிசியை கொண்டு சாதத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஏகநாதர் கோவிலில் அன்னம் சார்த்தல் விழா நடைபெற்றது. முன்னதாக, விருத்தகிரீஸ்வரர் கோயிலுள்ள அருள்மிகு பெரிய நாயகி சன்னதியில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சென்னையை அடுத்த திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடை அம்மன் திருக்கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி முன்னிட்டு, தியாகராஜ சுவாமிக்கு அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 50 கிலோ அரிசி கொண்டு உணவு சமைக்கப்பட்டு பொதுமக்கள் நன்றி செலுத்தும் விதமாக இறைவனுக்கு படைக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்தா கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.