தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா : திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு
Sep 4 2018 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குலாலர் மாதர் சங்கம் சார்பில் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீகிருஷ்ண சைதன்ய பஜனை மண்டலி குழுவினர் கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை ஆடல் பாடலுடன் பக்தர்கள் கண்முன் நிறுத்தினர். மேலும் விழாவையொட்டி யசோதா, கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சௌராஷ்ட்டிரா இன மக்களின் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணருக்கு சிறப்பு தீபாராதனை, பஜனை மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலந்துகொண்டு பல்வேறு பாடல்களை பாடினர். பெண்கள் பங்கேற்ற கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான குழந்தைகள் மாறு வேடமிட்டு கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணன், ராதை வேடமணிந்த சிறுவர் சிறுமியர் காண்போரை வெகுவாக கவர்ந்தனர். திங்கள் நகர், கக்கோடு பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுவர்களும், வில்லுக்குறி பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியரும் பங்கேற்றனர்.