கோகுலாஷ்டமியை முன்னிட்டு, நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாககொண்டாடப்பட்டது. பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் பம்மலில், ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தி விழா முன்னிட்டு பம்மல் சங்கர் நகர் பகுதியில் கிருஷ்ணர் சிலை அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தது. இதில் சிறுவர்கள் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு வழிபட்டனர். மேலும் உரியடி திருவிழா நடைபெற்றது. இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள, மதனகோபாலசுவாமி திருக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் கோதண்டராமசாமி திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கிருஷ்ணருக்கு கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும் தீபாரதனையும் நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி குருகுலத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கிருஷ்ணன் வேஷமிட்ட மாணவிகளின் கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாகர்கோவில் கிருஷ்ணா சுவாமி கோவிலில் 2 ஆயிரத்து 7 திரு விளக்கு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். விழாவின் போது சிறுவர் சிறுமியர்கள் கிருஷ்ணர்-ராதை போன்று வேடங்கள் அணிந்து வந்தது விழாவிற்கு பெருமை சேர்த்தது.
திண்டுக்கல் மாவட்டம், யாதவ மேட்டு ராஜக்காபட்டியில் உள்ள கிருஷ்ண கோவிலில் பராம்பாரிய கலைநிகழ்ச்சிகளுடன் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் தேர்ப்பவணி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கிருஷ்ணர் கோவிலில் குழந்தைகள் ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம், தென்கரை நாமத்வார் பிராத்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அகண்ட நாம கீர்த்தை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை அலங்காரம் செய்து அழைத்து வந்தனர்.
பாளையங்கோட்டை ஸ்ரீராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனை ஏராளமான பக்தா்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனா்.
இதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.