வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Aug 30 2018 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கீழ்த்திசை நாடுகளின் "புனித லூர்து" நகரம் என்று அழைக்கப்படும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா ஆலயத்தில், அன்னை ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள், நவநாள் விழாவாக கொண்டாடப்படுகின்றது. இதற்கான, ஆண்டுப்பெருவிழா நாள், கொடியேற்றதுடன் தொடங்கியது.
முன்னதாக, புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி, ஆலயத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியே எடுத்துவரப்பட்டு பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்துவைத்தார். சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்தின் உச்சியை கொடி அடைந்ததும், ஒரே நேரத்தில் ஆலயத்தின் விளக்குகள் ஏற்றப்பட்டு, வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கொடியேற்று நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
மாதாகோவில் திருவிழாவையொட்டி, திருச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதிகாலை 3 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.
சென்னை பெசன்ட் நகர், அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 46-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து அன்னையை வழிபட்டனர். முன்னதாக தேர் பவனி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் டாக்டர். ஜார்ஜ் அந்தோணி சாமி தலைமையில் புனித ஆரோக்கிய மாதாவின் கொடியேற்றப்பட்டது.