காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை மோசடி : சிலை தடுப்பு போலீசார், உலோக பரிசோதனை பிரிவினர் திடீர் ஆய்வு
Aug 16 2018 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை மோசடி தொடர்பாக சிலை தடுப்பு போலிசார் மற்றும் உலோக பரிசோதனை பிரிவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 117 கிலோ எடை கொண்ட சோமாஸ் கந்தர் சிலை இருந்தது. இந்தச் சிலை சேதமடைந்ததைத் தொடர்ந்து புதிதாகச் சிலை செய்யப்பட்டது. புதிதாகச் செய்யப்பட்ட சிலையில் தங்கம் சேர்ப்பதில் முறைகேடு நடைபெற்றதாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை அளித்த புகார் மனுவின் அடிப்படையில், நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளின் போது, புதிதாக செய்யப்பட்ட சிலையிலும், பழைய சிலையிலும் தங்கம் சேர்க்கப்படவில்லை என்பது சோதனையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த சிலை மோசடி விவகாரம் தொடர்பாக உலோக பரிசோதனை பிரிவினர் நேற்று மூன்றாவது முறையாக ஆய்வு மேற்கொண்டனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி பழனிசெல்வம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சிலைகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை - இதில் எந்த அளவுக்கு தங்கம் உள்ளது - எந்த வகையிலான உலோகத்தில் இந்தச் சிலைகள் செய்யப்பட்டுள்ளன - ஏதாவது போலி சிலைகள் உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.