ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருஆடிப்பூர தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு
Aug 13 2018 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருஆடிப்பூர தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீஆண்டாள் அவதரித்த புண்ணிய பூமியுமான ஸ்ரீவில்லிபுத்தூரில் திருஆடிப்பூர பெருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் திருவீதி உலா உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை பக்தி பரவசத்துடன் வடம்பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர். திருத்தேரின் முன்பு பெண்கள் கோலாட்டம் அடித்தும், பஜனை பாடல்கள் இசைத்தும் ஆண்டாளை தரிசனம் செய்தனர்.
முன்னதாக, மதுரை கள்ளழகர், ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோயில், திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் ஆகிய திருத்தலங்களில் இருந்து பிரசாதமாக கொண்டு வரப்பட்ட பரிவட்டங்கள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் ஆகியோருக்கு சாத்தப்பட்டு, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க திருத்தேரில் எழுந்தருளினர். ஆடிப்பூர விழாவையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.