திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றது தேவஸ்தான நிர்வாகம்
Jul 18 2018 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்பை தேவஸ்தான நிர்வாகம் திரும்பபெற்றுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதையொட்டி, கோவிலை சுத்தம் செய்வதற்காக, வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 6 நாட்கள், கோவில் முழுவதுமாக மூடப்படும் என்றும், பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. மேலும், பக்தர்கள் மலை ஏறுவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும், கோயில் ஊழியர்களுக்கு விடுப்பு அளித்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படாமல் நிறுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த முடிவை உடனே மறுபரிசீலனை செய்யுமாறு, ஆந்திர முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார். இதனையடுத்து, கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்பை திருப்பதி திருமலை தேவஸ்தானம் திரும்பப்பெற்றுள்ளது. ஆகஸ்ட் 11 மற்றும் 12-ஆம் தேதி சிறுசிறு குழுக்களாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.