திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மேலும் வலுப்படுத்தும் விதமாக உள்ளது : ரமண தீட்சிதலு குற்றச்சாட்டு
Jul 17 2018 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அடுத்த மாதம் நடைபெறவுள்ள திருப்பதி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, திருவாபரணம் உள்ளிட்ட சொத்துக்கள் அபகரிப்பு தொடர்பான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக உள்ளது என கோயில் பிரதான அர்ச்சகராக இருந்த திரு. ரமண தீட்சிதலு குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பதி கோயில் சமையற்கூடத்தில் இருந்த புதையல் மற்றும் மன்னர்களால் வழங்கப்பட்ட விலை மதிப்பற்ற திருவாபரணங்கள் காணாமல் போனது குறித்து கோயில் பிரதான அர்ச்சகராக பணியாற்றிய திரு. ரமண தீட்சிதலு பரபரப்பான குற்றச்சாட்டை வெளியிட்டிருந்தார். இதனை தேவஸ்தான நிர்வாகம் மறுத்திருந்தது.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு திரு. ரமண தீட்சிதலு பேட்டியளித்தார். திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதையொட்டி, அந்த மாதம் 9ம் தேதி முதல் 17ம் தேதி வரை பெருமாளை தரிசனம் செய்யவும், மலை ஏறுவதற்கும் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் கோயில் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படாமல் நிறுத்தப்படவுள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, ஏற்கெனவே தாம் தெரிவித்த குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது என திரு. ரமண தீட்சிதலு தெரிவித்தார்.
புதையல் மற்றும் திரு ஆபரணங்கள் மாயமானது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைக்கவேண்டும் என்றும் திரு. ரமண தீட்சிதலு குறிப்பிட்டுள்ளார்.