ஆடி மாதம் பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
Jul 17 2018 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடி மாதம் பிறந்ததையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பக்தர்கள் விரதமிருந்து அம்மனை தரிசனம் செய்தால், சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஈரோடு மாநகரில் உள்ள பிரசித்திபெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு அதிகாலையிலேயே அபிஷேகம் செய்யப்பட்டு, பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமையும், ஆடிமாதப் பிறப்பும் ஒன்றி வந்துள்ளதால், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகரத்தார் சார்பில் பால்குடம் ஏந்தி, காரைக்குடி நகர சிவன் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்விக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காவடி மற்றும் தீச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் மகா மாரியம்மன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ராஜராஜேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். இதேபோன்று சமயபுரம் மாரியம்மன், உறையூர் வெக்காளியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் ஆலயங்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித் தபசு திருவிழா இன்று காலை கோமதியம்மாள் சன்னதி முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வரும் 25ம் தேதி கோமதியம்மன் திருத்தேரோட்டமும், 27ம் தேதி மாலை கோமதி அம்மனுக்கு சுவாமி சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித் தபசு திருவிழாவும் நடைபெறவுள்ளன.