மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் 51 கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு - டிசம்பர் மாதம் இறுதிவரை கடைகளை வைத்திருப்போம் என பிரமாணப் பத்திரம் எழுதித்தரவும் ஆணை
Jul 13 2018 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அம்மன் சன்னதியில் உள்ள கடைகளை, வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டும் திறக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வாளத்கில் உள்ள கடைகளில் கடந்த ஃபிப்ரவரி மாதம் 2-ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை டிசம்பர் 31ம் தேதிக்குள் மூட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கடைகாரர்கள் சங்கத்தின் தலைவர், ராஜுநாகுலு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடைகளை காலி செய்ய டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலஅவகாசம் உள்ள நிலையில், மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை என்றும், கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 51 கடைகளை டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை திறக்க நீதிபதி அனுமதி வழங்கினார். மேலும் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை மட்டுமே கடைகளை வைத்திருப்போம் என கடை உரிமையாளர்கள் பிரமாணப் பத்திரம் எழுதித்தரவேண்டும் என்றும் நிலுவையில் உள்ள வாடகைப் பாக்கியை ஆலய நிர்வாகத்திடம் செலுத்தவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.