நூற்றாண்டின் அரிய நிகழ்வான சந்திரகிரகணம் - இந்தியாவில் வரும் 27ம் தேதி காணமுடியும் : திருப்பதி கோயில் நடை 12 மணிநேரம் சாத்தப்படுகிறது
Jul 4 2018 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலவானத்து அரிய நிகழ்வான சந்திரகிரகணம் வரும் 27-ம் தேதியன்று நிகழவிருப்பதை இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் பார்க்க முடியும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரகிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை 12 மணி நேரம் சாத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளியை பூமி மறைத்துக்கொள்ளும் போது, சந்திரகிரகணம் உருவாகிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் வரும் 27ம் தேதி நிகழவுள்ளது. முழு சந்திரகிரகணம் வரும் 27-ம் தேதி இரவு 11.54 மணி முதல், மறுநாள் அதிகாலை 3.49 மணி வரை நிகழவுள்ளது. இந்த அரிய நிகழ்வு ஏறத்தாழ ஒருமணிநேரம் 43 நிமிடங்களுக்கு நீடிக்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவைத் தவிர தெற்கு அமெரிக்கா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் சந்திரகிரகணத்தை காணமுடியும் என கொல்கத்தா பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கிரகணத்தையொட்டி 12 மணிநேரம் நடை சாத்தப்படுகிறது. வரும் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, 28-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும் என தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரகண நிகழ்வையொட்டி, கல்யானோற்சவம், ஊஞ்சல் சேவை, பெளர்ணமி கருட சேவை உள்ளிட்ட பூஜைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.