பழனியில் உலக நலன்வேண்டி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அன்னாபிஷேகம் : 108 வலம்புரி சங்குகள் வைத்து யாகபூசை
Jun 27 2018 4:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் உலக நலன்வேண்டி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அன்னாபிஷேகம் மற்றும் 108 வலம்புரி சங்குகள் வைத்து யாகபூசை நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கேயிலில் உலக நலன்வேண்டி, சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்றன. மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் காசி, கைலாஸ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் நிரப்பி யாகசாலைபூஜை நடத்தப்பட்டது. 108 வலம்புரி சங்குகள் வைத்தும் வழிபாடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பிரியாவிடையுடன் அருள்மிகு சொக்கநாதர் சுவாமியும், அதன் பின் சிறியதேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தனர். பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை சக்தி விநாயகர் திருக்கோயிலில், மழை பெய்ய வேண்டி, ஸ்ரீமஹா வராகி 108 திருவிளக்கு பூஜை நடை பெற்றது. இதில், சுற்றுபுறப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஸ்ரீகாரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் மாங்கனி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இவ்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஸ்ரீகாரைக்காலம்மையாருக்கும் - பரமதத்தச் செட்டியாருக்கும், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சைவமுறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மாங்கனித் திருவிழாவையொட்டி, காரைக்கால் மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.