தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை - வழிபாடு : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Jun 18 2018 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் பாலையூரில் 160 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் நார்த்தாம்பூண்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள 60 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு இராட்சத கிரேன் மூலம் இன்று புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக குடமுழுக்கை முன்னிட்டு மகா யாக குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள தென்பரை கிராமத்தில் அமைந்துள்ள சிறப்புவாய்ந்த ஆவணியப்பன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா இன்று விமர்சியாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சோழம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சோழ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள 24 கிரா மக்கள் வந்து சோழ விநாயகரை வழிபட்டு சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த கோட்டைக்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
வஸ்திர தானம் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடத்தப்பட்டு புனித நீர் அடங்கிய கலசங்கள் யாக சாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதனைதொடர்ந்து, மூலவர் விமானம், மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனித நீரினால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.