கன்னியாகுமரியில் சிவராத்திரியையொட்டிய சிவாலய ஓட்டம் : தங்கப்பல்லக்கில் முத்தங்கி சேவையுடன் வீதி உலா
Feb 13 2018 2:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சிவாலய ஓட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதையொட்டி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹா சிவராத்திரியையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில், முதல் சிவாலயமான முன்சிறை திருமலை மகா தேவர் கோவிலில் இருந்து காவி உடை உடுத்திய பக்தர்கள் கையில் விசறியுடன் பக்தி கோஷங்களை முழங்கியபடி சிவாலய ஓட்டத்தை தொடங்குவார்கள். பின்னர் 12-வது சிவாலயமான நட்டாலத்தில் உள்ள சங்கர நாராயணர் கோவிலில் வந்து சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்வது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இன்று மாலை முதல், சிவாலயமான முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை தொடங்க உள்ளனர். இதில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மகாசிவராத்திரியை முன்னிட்டு, ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி - பர்வத வர்த்தினி அம்மன் திருக்கோயிலில், சுவாமி அம்பாள் தங்கப் பல்லக்கில் முத்தங்கி சேவையுடன் வீதி உலா நடைபெற்றது. இன்று இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும், நாளை தேரோட்டமும், நாளை மறுநாள் அக்னி தீர்த்தக் கடலில் ஸ்ரீராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்த வாரி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகநாத ஸ்வாமி ஆலயத்தில் ஆயிரத்து எட்டு சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. பிறையணி அம்மன் சமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி ஆவா கணம் செய்யப்பட்டிருந்த கடத்திற்கு முன்பு 15க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. பின்னர் பூர்ணாஹூதியும், தொடர்ந்து சிறப்பு அடுக்கு தீபாராதனையும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஆயிரத்து எட்டு சங்குகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீரைக் கொண்டு நாகநாதசுவாமி உட்பட பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.