திருவையாறில் உள்ள தியாகராஜ சுவாமிகளின் 171-வது ஆராதனை விழா விமரிசையாக தொடங்கியது : பல்வேறு இசை மற்றும் வாத்தியக் கலைஞர்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடினர்
Jan 6 2018 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள தியாகராஜ சுவாமிகளின் 171-வது ஆராதனை விழா இன்று விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு இசை மற்றும் வாத்தியக் கலைஞர்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடினர்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் 171-வது ஆராதனை விழா, அவர் முக்தி அடைந்த திருவையாறில் இன்று விமரிசையாக தொடங்கியது. ஆராதனையை முன்னிட்டு காலை 7 மணியளவில் தியாகராஜர் வாழ்ந்த திருமஞ்சன வீதியிலிருந்து அவரது திருவுருவப்படத்துடன் உஞ்சவிருத்தி ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய விதிகள் வழியாக வந்த ஊர்வலம், ஆராதனை நடைபெறும் தியாராஜர் சமாதி அமைந்துள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தது. பின்னர் தியாகராஜ சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு பால், பன்னீர், மஞ்சள் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ள இசை மற்றும் வாத்தியக் கலைஞர்கள் ஒன்றாக இணைந்து தியாகராஜ சுவாமிகள் இயற்றிய பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடினர்.
இதில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, சீர்காழி சிவசிதம்பரம், ஓ.எஸ். அருண், காயத்ரி வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில், தியாகராஜ சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.