நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை
Dec 17 2017 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சாத்தப்பட்டு, நறுமண மலர்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அனுமன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல்லில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் திருக்கோயிலில், அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சாத்தப்பட்டது. மேலும், நறுமண பூக்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. இதில், சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள மகாவீரர் ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆஞ்சநேயர், வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருச்சியில் பிரசித்திபெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடமாலை மற்றும் 1 லட்சத்து 8 ஜாங்கிரி மாலை சாற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரிமாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்திபெற்ற தாணுமாலையன் சுவாமி கோவிலில் உள்ள புகழ்பெற்ற 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலைக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட ஆஞ்சநேயர் கோவில்களில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழுப்புரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.