பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் : 19 பஞ்சலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பு
Dec 10 2017 6:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் உள்ள நெய்க்குப்பை சுந்தரேஸ்வரர் கோவிலில் இருந்த மிகப் பழமையான 19 பஞ்சலோக சிலைகளை பாதுகாப்பு மையத்திற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.
பந்தநல்லூர் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான மிகப் பழமையான 265 உலோக சிலைகள் பசுபதீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அங்கிருந்த 6 சிலைகள் களவு போனதையடுத்து கோவிலின் எழுத்தர் ராஜா, மயிலாடுதுறை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பந்தநல்லூர் அருகே நெய்க்குப்பை சுந்தரேஸ்வரர் கோவிலில் மிகப் பழமையான 19 பஞ்ச லோக சிலைகள் உரிய பாதுகாப்பின்றி இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்ச லோக சிலைகளை பாதுகாக்கும் வகையில் 4 போலீசார் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் பொறுப்பு வகிக்கும் ஞானசேகர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நெய்க்குப்பை கோவிலில் இருந்த 19 சிலைகளையும் கிராம மக்கள் முன்னிலையில், சரிபார்த்து கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவில் சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு வேன் மூலம் கொண்டு சென்றனர்.