தமிழகத்தின் பல்வேறு பிரச்சித்திபெற்ற கோவில்களில் கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி, மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடி சுவாமி வழிபாடு மேற்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் 35-வது ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, 300 மீட்டர் நீளமுள்ள திரி, 1,000 கிலோ நெய் மற்றும் 50 கிலோ கற்பூரம் கொண்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் சீழ்காழி அருகே 80 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திகை திருநாளை முன்னிட்டு ஆயிரத்து எட்டு அகல்விளக்கு ஏற்றி பெண்கள் வழிபட்டனர். இறுதியாக சிவபெருமானுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், ஆம்பலாப்பட்டு பகுதியில் உள்ள தென் திருவண்ணாமலை என்கிற சிவாலயத்தில் கார்த்தகை பெருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்த தீபம் எரிந்து கொண்டிரக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அண்ணாமலையாருக்கும், உண்ணாமலை அம்மன் திருமேனிக்கும் சிறப்பு தீபாராதனை காட்டுப்பட்டு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
மதுரை மாவட்டம் திடியன் கிராமத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள ராமர் கோவிலில் கார்த்தகைத் தீப திருநாளையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றகுடி மலை மீது அருள் புரியும் சண்முகநாதர் ஆலயத்தில் கார்த்திகைத் திருவிழாவையொட்டி, தவ திரு குன்றகுடி பொன்னம்பல அடிகளார் பரணி தீபத்தை ஏற்றினார், கொட்டும் மழையில் சொக் பனையையும் ஏற்றப்பட்டது. அதன் பின் கொட்டும் மழையில் மலையின் மீது மகாதீபம் ஏற்றப்பட்டது அப்பொழுது ஆரோகரா கோசம் எழுப்பி பக்தர்கள் வழிப்பட்டனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி, தண்டையார்பேட்டை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகையை முன்னிட்டு, மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தென் திருவண்ணாமலை என்றழைக்கப்படும் பரமசிவன் மலை கோயிலில் கார்த்திகை மாதம் மகாதீபம் ஏற்றப்பட்டது. சுமார் 600 லிட்டர் கொள்ளளவு உள்ள கொப்பறையில், சுமார் 320 கிலோ எடையிலான பஞ்சுத் திரியால் பக்தர்களிடம்நன்கொடையாக பெறப்பட்ட நெய் ஊற்றப்பட்டது. பின்னர் பகதர்களின் ஓம் நமச்சிவாயா சரணம் முழங்க மகாதீபம் ஏற்றப்பட்டது. தீபம் தொடர்ந்து மூன்று நாட்கள் எரியும் வகையில் சுமார் 1000 லிட்டர் நெய் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அகஸ்தியர் கோவிலில் முதல்முறையாக கிரிவலம் வந்து கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்த விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.