சனி பிரதோஷ தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாரில அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற சனிபகவான் கோயிலில், சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு, பால், தயிர், சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று, நந்தி பகவானை வழிபட்டதுடன், தியாகராஜ சுவாமிக்கு நடத்தப்பட்ட சாயரட்சை பூஜையிலும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
தூத்துக்குடி சிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைதொடர்ந்து நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானை பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.
வேலூர் கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதனைதொடர்ந்து வீதி உலா சென்ற சுவாமி அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு சங்கமேஸ்வரர் கோயிலில், பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. இதனையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனிடையே, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள இராஜகோபால சுவாமி ஆலயத்தில் பங்குனி பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிஷிப முகபர்வதம் பட்டாபிராமர் திருக்கோலத்தில் எழுந்தருளிய இராஜகோபால சுவாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.