உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோயிலில் திருவத்யயன உற்சவத்தையொட்டி சொர்க்கவாசல் திறப்பு : திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் நாச்சியாரை தரிசனம் செய்தனர்
Feb 23 2017 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசித்திபெற்ற உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோயிலில், திருவத்யயன உற்சவத்தை யொட்டி, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் நாச்சியாரை தரிசனம் செய்தனர்.
108 திவ்யதேசங்களில் இரண்டாவதான உறையூர் கமலவள்ளி நாச்சியார் திருக்கோயிலில், கடந்த 17-ம் தேதி திருவத்யயன உற்சவம் தொடங்கியது. முதல் 5 நாட்கள் திருமொழி திருநாளாகவும், இரண்டாவது 5 நாட்கள் திருவத்யயன விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் 6-ம் நாளான நேற்று, கமலவள்ளி நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து தங்க பல்லக்கில் உள்வீதியுலா வந்தார். பின்னர் பரமபதவாசல் திறக்கப்பட்டு, நாச்சியார், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து வழிநடை உபயங்கள் கண்டருளி திருவாய்மொழி மண்டபத்தில் காட்சியளிக்க, அங்கு திருவாய்மொழி பாசுரங்களை அரையர்கள் வாசித்தனர். பின்னர், வீணை ஏகாந்தத்துடன் நாச்சியார் மூலஸ்தானாம் சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம், தெற்குப் பொய்கைநல்லூரில் உள்ள செல்லியம்மன் ஆலயத்தில், உலக நன்மை வேண்டி, ஆயிரத்து 8 மூலிகைப் பொருட்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு மஹா சண்டியாகம் நடைபெற்றது. இதில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.
இதனிடையே, மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில், சாஸ்தாவிற்கு 69 தீபங்கள் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.