விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில், ஆற்றுத் திருவிழாவை யொட்டி, தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், ஆற்றுத் திருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு ஆற்றுப்பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு விழாவினை உற்சாகத்துடன் கொண்டாடினர். இவ்விழாவின் ஒருபகுதியாக, மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் உட்பட 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த சுவாமிகள் எழுந்தருள, மண்டகப்படி பூஜை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், சுவாகள் ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல், கடலூர் தென்பெண்ணை ஆற்றில், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருந்து முருகன், வரதராஜப்பெருமாள் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள் எழுந்தருள, தீர்த்தவாரி நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில், பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதனிடையே, நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கிருஷ்ணன் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி, ஸ்ரீ கிருஷ்ணருக்கும், ஸ்ரீ ஆண்டாளுக்கும் மாலை மாற்று வைபவம், திருமாங்கல்யதாரணம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு கீர்த்தனைகள் பாடி வழிபாடு மேற்கொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீநித்யகல்யாணப்பெருமாள் ஆலயத்தில், திருப்பாவை உற்சவத்தின் நிறைவாக, ஸ்ரீநித்யகல்யாணப்பெருமாள் ரங்கமன்னராக ஆண்டாளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.