சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் 170-வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை இசைக்கும் நிகழ்ச்சி : நூற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் தியாகராஜரின் கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர்
Jan 17 2017 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் 170-வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை இசைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜரின் கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர்.
திருவாரூரில் பிறந்து திருவையாறில் முக்தியடைந்த சத்குரு தியாகராஜரின் ஆராதனை விழா ஆண்டுதோறும் அவர் முக்தியடைந்த பகுளபஞ்சமி திதியன்று காவேரி கரையில் உள்ள அவரது சமாதியில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆராதனை விழா கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக காலை 7 மணிக்கு தியாகராஜர் வாழ்ந்த திருமஞ்சன வீதியில் உள்ள இல்லத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து தியாகராஜரின் திருவுருவப் படத்துடன் உஞ்சவிருத்தி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆராதனை பந்தலை அடைந்தது. தியாகராஜர் சமாதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பால், பன்னீர், மஞ்சள் போன்ற பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதேசமயம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கர்நாடக இசைக்கலைஞர்கள், வாத்தியக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசையஞ்சலி செலுத்தினர். இந்த இசை விழாவில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மகதி, ஓ.எஸ். அருண், உமையாள்புரம் சிவராமன், அசோக்மணி, அரித்துவார மங்களம் ஏ.கே.பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.