கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நான்கு மாட வீதிகளை சுற்றி திருக்குடை ஊர்வலம்
Dec 2 2016 9:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நான்கு மாட வீதிகளை சுற்றி திருக்குடை ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. தீபத்திருவிழாவின் 10ம் நாள் விழாவில், அதிகாலை பரணி தீபமும், மாலை வேளையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதில், தமிழகம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.
10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் போது, காலை மற்றும் இரவு வேளைகளில், பஞ்சமூர்த்திகள் திருக்கோயிலின் நான்கு மாடவீதி உலா நடைபெறும். இதில் சுவாமிகளுக்கு மேல் கட்டப்படும் திருக்குடைகளை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஸ்ரீ அருணாச்சலா ஆன்மீக சேவா சங்கத்தின் சார்பில் காணிக்கையாக அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் 14 திருக்குடைகள் வழங்கப்பட்டன. அண்ணாமலையார் கோவிலில் இந்த திருக்குடைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, திருக்கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு திருக்குடைகள் அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.