முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முழுமையாக குணமடைய வேண்டி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நடைபெற்ற மகாயாகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா விரைவில் முழுமையாக குணமடைய வேண்டி, பொடிநாயக்கனூரில் உள்ள பள்ளி மைதானம் ஒன்றில் மஹா மிருத்யுஞ்ஜய ஆயுள் தேவதை, தன்வந்திரி சம்புடீகரண மஹா யாகம் நடத்தப்பட்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த சிறப்பு யாக பூஜையில் 108 பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த யாக மேடையில் மகாலட்சுமி, மிருத்யுஞ்ஜயர், பாலாம்பிகை, தன்வந்திரி விஷ்ணு திருவுருவச் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. பல்வேறு பால்மரக்குச்சிகள், மூலிகை வேர்கள், மூலிகைக் காய்கள், பழங்கள், பட்டு, புஷ்பங்கள், நெய் என பல்வேறு ஹோமப் பொருட்களைக் கொண்டு மஹா யாகம் நடத்தப்பட்டது. அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, விருதுநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலுக்கு 23 ஆயிரம் பெண்கள் பால்குடம் ஏந்தி, ஊர்வலமாகச் சென்றனர். சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து சாரைசாரையாக புறப்பட்ட பெண்கள், குலவையிட்டவாறு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் ஏந்தி, ஊர்வலமாகச் சென்று பத்ரகாளியம்மன் கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தும், சிறப்பு பூஜைகள் செய்தும், முதலமைச்சர் பூரண நலம்பெற வேண்டி, மனமுருக வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
வடசென்னை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி பீலிக்கான் மூனிஸ்வரர் அங்காள ஈஸ்வரி காளியம்மன் ஆலயத்தில், 108 யாக குண்டங்கள் அமைத்து, மகா வேள்வி நடைபெற்றது. 150 சிவாச்சாரியார்கள் ஏககால அஷ்டோத்ர மஹா அமுர்த மிருத்யுஞ்ஜய யாகம், மகா கணபதி யாகம், மகா ஆயுஷ்ய யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் இந்த மகா வேள்வியில் பங்கேற்று, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மிக விரைவில் பூரண நலம்பெற வேண்டி மனமுருக வழிபட்டனர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி நெல்லையிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நெல்லை மாநகர் மாவட்ட கழகத்தினர் ஆயிரத்து 208 பேர் பாதயாத்திரை புறப்பட்டனர். பாளையங்கோட்டை கோட்டை வாசல் முருகன் கோயிலிருந்து புறப்பட்டு, வி.எம். சத்திரம், கிருஷ்ணாபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகர் வழியாக 68 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொள்கின்றனர். வியாழன் கிழமை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடத்தப்படுகிறது.
இதனிடையே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி, சென்னை அசோக்நகர் மல்லிகேஸ்வரர் கோயிலில் உள்ள துர்க்கையம்மனுக்கு கழக இலக்கிய அணி சார்பில், ராகுகால விளக்குப் பூஜை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.