தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற கோயில் விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Oct 1 2016 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. முன்னதாக அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம் நசியனூரில் அமைந்துள்ள ஆதிநாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத அமாவாசையையொட்டி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு, வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அங்காள பரமேஸ்வரியை வழிபட்டனர்.
இதனிடையே, நவராத்தி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த கிடாரங்கொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ் வித்யா மகா மேறு பீடத்தில் நித்திய பூஜை மற்றும் சகஸ்டரநாம அர்ச்சனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குளசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில், தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, கோயில் கொடிப்பட்டம் யானை மீது ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கொடியேற்றப்பட்டது. இதனையடுத்து, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிறப்பு அம்சமாக, ஏராளமான பக்தர்கள் அம்மனை வேண்டி, 10 நாட்கள் காளி, சிங்கம், குரங்கு, கரடி போன்ற வேடங்கள் அணிந்து, விரதம் இருப்பார்கள். வேடம் அணியும் பக்தர்கள், இன்று கடலில் நீராடி, காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.