முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில், அ.இ.அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் அ.இ.அ.தி.மு.க. சார்பில், அபிராமி அம்மன் கோயிலில் உள்ள காளகஸ்தீஸ்வரர், மூகாம்பிகை, துர்கையம்மன், அபிராமி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், கழகத்தினர் திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி ஒன்றிய அ.இ.அ.தி.மு.க. சார்பில், கே.ஜி. கண்டிகை கிராமத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் ஒன்றியக் கழகம் சார்பில், பிரசித்திபெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலயத்தில், முதலமைச்சர் நலம்பெற வேண்டி, தங்கத் தேர் இழுத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவளத்தில், அன்சாரி தர்ஹாவில் நடைபெற்ற சிறப்பு துவாவில் அ.இ.அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், மீனாட்சி அம்மன் கோயிலில், அம்மனுக்கு பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், அ.இ.அ.தி.மு.க.வினர் தங்கத் தேர் இழுத்து வழிபாடு மேற்கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், மேலூர் பிரசித்திபெற்ற பழமுதிர்சோலை முருகன் கோயிலில், தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், பாதூர் அகதீஸ்வரர் கோயிலில் உள்ள பிரத்யேங்கிரா தேவி சன்னதியில் நடைபெற்ற சிறப்பு யாக பூஜையில், கழகத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், விஜயநாராயணம் ஐநூற்று நங்கை பகவதி அம்பாள் திருக்கோயிலில், முதலமைச்சர் பூரண நலம்பெற, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மயூரநாதர் ஆலயத்தில், கோ பூஜை மற்றும் கஜபூஜையும், ஆயிரத்து எட்டு நெய் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. இதில், அ.இ.அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் சிவசுப்ரமணியர் கோயிலில், அ.இ.அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நலம்பெற வேண்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.