மஹாளய அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வழிபாடு : ஆயிரக்கணக்கானோர் நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம்
Sep 30 2016 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாளய அமாவாசை தினமான இன்று ராமேஸ்வரம், திருச்சி அம்மா மண்டபம், பவானி கூடுதுறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பொதுமக்கள் முக்கிய நீர்நிலைகளுக்குச் சென்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினால், வீட்டில் நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை. அதன்படி, மஹாளய அமாவாசையான இன்று தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.
ராமேஸ்வரம் புனித அக்னி தீர்த்தக்கடலில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி தர்ப்பணம் செய்து பித்ரு கடன்களை நிறைவேற்றினர்.
திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுத்ததுடன், அன்னதானம் வழங்கி வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் காவேரி, பவானி, அமுதநதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில், ஆயிரக்கணக்கானோர் இன்று புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.
கும்பகோணத்தில் இன்று அதிகாலை முதலே காவேரி ஆறு, மகாமக குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருவாரூர் தியாகராஜர் சுவாமி ஆலயத்தின் மேல்பகுதியில் 80 தீர்த்த கட்டங்களை உள்ளடக்கிய கமலாலய குளத்தில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் புனித நீராடி பித்ருகடனை நிறைவேற்றினர்.
நாகை மாவட்டம் கோடியக்கரை சன்னதி கடல், பூம்புகார் சங்குமுக தீர்த்தம், வேதாரண்யம் மணிகர்ணிகை தீர்த்தம் ஆகியவற்றில் ஏராளமானோர் புனித நீராடி திதி கொடுத்தனர்.
இதேபோன்று திருவள்ளூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனிதநீராடி முன்னோர்களுக்கு திதிகொடுத்து வழிபட்டனர்.