தமிழகத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவெள்ளரை பெருமாள் கோயில், லால்குடி பெருமாள் கோயில் மற்றும் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. இல்லங்களில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு பலகாரங்கள் செய்து வழிபட்டனர்.
ஈரோடு சூரம்பட்டியில், ஸ்ரீகிருஷ்ணர், ராதா சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த முறுக்கு, சீடை மற்றும் பழங்களை படையலிட்டு பக்தர்கள் வழிபட்டனர். கண்ணன் பாடல்களைப் பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணனுக்கு தொட்டில் கட்டி சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
கரூர், அண்ணாநகரில் உள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலைமுதலே சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. கரூர் பண்டரிநாதன் ஆலயம், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயம், திருக்காம்புலியூர் நரசிம்ம பெருமாள் ஆலயம், வாங்கபாளையம் கிருஷ்ண பெருமாள் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
புதுக்கோட்டையில் உள்ள பெருமாள் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் வி.மருதூரில் உள்ள வேணுகோபாலசுவாமி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தருமபுரி அருகே ஆட்டுக்காரன்பட்டி பிருந்தாவனத்தில் அமைந்துள்ள ராதே கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். பள்ளிக்குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
திண்டுக்கல், யாதவ மேட்டு ராஜக்கப்பட்டியில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர் வேடமணிந்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீநவநீதகிருஷ்ணன் கோயிலில், அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீகிருஷ்ணர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.