திருச்சியில் உள்ள நந்தர்ஷா பள்ளிவாசலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற சந்தனகூடு ஊர்வலம் : பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வழிபட்டனர்
Jul 3 2015 9:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நந்தர்ஷா பள்ளிவாசலில் சந்தனகூடு ஊர்வலம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள நந்தர்ஷா பள்ளிவாசல் 1018 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். இங்கு ஆண்டுதோறும் சந்தனகூடு வைபவம் 18 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு ஊர்வலம் காந்தி மார்க்கெட்டில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பள்ளிவாசலை அடைந்தது. முன்னதாக ஹஜ்ரத் தபலே ஆலம் பாதுஷாவின் நினைவிடத்தில் இந்து, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மக்கள் மாலை அணிவித்து மதநல்லிணக்கத்தை பறை சாற்றினர். தொடர்ந்து சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இதில், தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.