தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் பால்குடம், காவடி, பௌர்ணமி ஊஞ்சல் சேவை, திருவிளக்கு பூஜை, திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கருப்பூர் கீழத்தெரு கிராமத்தில் ஸ்ரீசுந்தர மகாளியம்மன் கோயிலில் வீற்றிற்கும், விநாயகர், முருகன், பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் திருவிழா நடைபெற்று வருகிறது. கருப்பூர் காவத்தம்மன் கோயில் அருகே காவிரி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தும்பவனம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ தும்பவனத்தம்மன் கோயிலில் வைகாசி மாத பௌர்ணமி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. ஸ்ரீதும்பவனத்தம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜையையொட்டி, முத்துமாரி அம்மனுக்கு பால், தேன், இளநீர், சந்தனம், தயிர் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஊஞ்சல் அலங்காரத்தில் ஸ்ரீதும்பவனத்தம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தை கண்டு கழித்தனர்.
தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு திருவிழா 35 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீபெரியநாயகி அம்மன், ஸ்ரீகந்தர் மற்றும் ஸ்ரீ தனி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர். அதைப் போல் வெட்டிவேர் பல்லக்கில் ஸ்ரீ வசிஷ்டர், ஸ்ரீ அருந்ததி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 பெண்கள் கலந்துகொண்டு உலக நன்மை வேண்டியும், தீர்க்க சுமங்கலியாக இருக்க பிரார்த்தனை மேற்கொண்டனர். உற்சவர் அங்காளம்மன் எழிலரசி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் கூட்டம் காரணமாக கட்டண தரிசன வழி மற்றும் இலவச தரிசன வழி என அனைத்து வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தென்னம்புலம் கிராமத்தில் உள்ள மழை மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திருத்தேரோட்டம் நடைபெற்றது. அம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி வைகாசி தேரோட்டம் நடைபெற்றது. சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சிறுவாபுரி முருகன் கோயிலில் வள்ளி, மணவாள பெருமாள் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி துணைவியார் கோயிலை சுற்றி ஆறு முறை உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.