தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
Jun 1 2023 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கோயில் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரியில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை யொட்டி, தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்ட பின்னர், திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த தேரோட்ட திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலாப்பயணிகளும் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தண்டார்கோவில் கிராமத்தில் உள்ள லோகாம்பிகை வலமுறை மாஷபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. மூலவர் சிவபெருமானுக்கும் லோகாம்பிகை அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு 'ஓம் நமசிவாய' என்ற பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள அபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் வைகாசி விசாக பெருவிழாவையொட்டி, தேரோட்ட நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் சுவாமி புதிய திருத்தேரில் எழுந்தருள, திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 2ம் நாள் நிகழ்ச்சியாக, அன்ன பறவை வாகனத்தில் பெருமாள் வீதியுலா சிறப்பாக நடைபெற்றது. வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, திருவாபரணங்கள் மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து வெள்ளியால் ஆன அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த வரதராஜ பெருமாளை, வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.