தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
May 31 2023 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சாமி, ஸ்ரீ ஊர் காவலன் சாமி, ஸ்ரீ கொடிப்புலி கருப்புசாமி கோயிலில் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. அய்யனார் சாமி, ஊர்காவலன் சாமி, கொடிபுளி கருப்புசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் குதிரை எடுப்பு விழா மேளதாளம் முழங்க கச்சராயிருப்பு கிராமத்தில் நான்கு தெரு வீதிகளில் ஊர்வலமாக வந்து திருக்கோவில் முன்பாக நிறுத்தப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மேலும் கிராம மக்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடைவீதியில் 500 ஆண்டுகள் பழமையான இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோயில் உள்ளது. இதில் கடந்த 21 ஆம் தேதி அம்மன் சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் 18 பட்டியை சேர்ந்த மண்டகப்படிதாரர்கள் சார்பாக விஷேச பூஜைகள் நடைபெற்றன. நேற்று ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து குடகனாற்றில் இருந்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குழந்தைகளை தூக்கியவாறும், கையில் அக்னி சட்டி ஏந்தியவாரும் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். இதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வைகாசி திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. கோயிலில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள் பாளித்தார். கோயில் உருவாகிய காலத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி வைகாசி திருவிழாவின் இறுதி நாளில் நடைபெற்று வருகிறது. மூல உற்சவராக அருள்மிகு முத்து மாரியம்மன் அலங்கரிங்கப்பட்டு பட்டுடுத்தி எழுந்தருளினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ வேங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முளைப்பாரி எடுத்த பெண்கள் கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் சுற்றி பாரம்பரிய முறைப்படி கும்மி அடித்தும், குலவையிட்டும் வாண வேடிக்கைகள் முழங்க மேளதாளங்களுடன் கோயில் வந்தடைந்தனர். நல்ல மழை பொழிய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், ஊர் நலம் பெற வேண்டியும் ஸ்ரீ வேங்கடாஜலபதியை வழிபட்டுச் சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் திருப்பலி மேடையிலிருந்து கிரீடம் பவனியாக எடுத்துவரப்படடு மாதாவின் சொரூபத்திற்கு முடிசூட்டப்பட்டது. அதை தொடர்ந்து தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.