சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 30-ம் தேதி வரையிலான தரிசனத்திற்கு 8 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு : பக்தர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
Nov 26 2022 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 30-ம் தேதி வரையிலான தரிசனத்திற்கு 8 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ள நிலையில், பக்தர்கள் முகக்கவசம் அணிந்துவர திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் ஐயப்பனை தரிசிக்க சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் வரும் 30-ந் தேதி வரை சபரிமலை தரிசனத்திற்கு 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. உடனடி முன்பதிவையும் சேர்த்தால் நவம்பர் மாத இறுதிக்குள் 10 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.