418 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் - கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Jul 6 2022 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம், 418 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றாகவும், 108 வைணவ திருத்தலங்களில் 76ஆவதாக போற்றப்படுவதும், 13 மலைநாட்டு திருப்பதிகளில் இரண்டாவது ஆலயமாகவும் கருதப்படும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில், சுமார் 418 ஆண்டுகளுக்கு முன், வேணாட்டு அரசர்கள் ஆண்ட கால கட்டத்தில் அப்போதைய அரசனான வீர ரவிவர்மா தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்திருக்கோயிலில், கடந்த 17 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவடைந்து கடந்த 29ஆம் தேதி முதல், கும்பாபிஷேக விழா தொடங்கியது. 7 ஆண்டுகளாக பாலாலய சன்னதியிலிருந்த சாமி விக்ரகங்கள் கருவறை அமைந்துள்ள ஒன்றைக்கல் மண்டபத்திற்குள் கடந்த 30ஆம் தேதி எடுத்து செல்லபட்டது.
இந்நிலையில், 418 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஆலய தந்திரியான திருவனந்தபுரம் அத்தியர மடத்தை சேர்ந்த கோகுல் தம்பூதிரி தலைமையில் கும்பகலசங்கள் எடுத்து வரப்பட்டு காலை சரியாக 6.30-க்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, ஆலய வளாகத்திலுள்ள திருவம்பாடி கிருஷ்ணசுவாமி சன்னதி மற்றும் தர்ம சாஸ்தா சன்னதியிலும், மன்னர்கள் போற்றி வணங்கிய மூலவரான குலசேகர பெருமாள் சன்னதியிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.