புதுச்சேரி அருகே முத்து மாரியம்மன் கோவிலில் சிவன், பார்வதி திருக்கல்யாண உற்சவம்
May 18 2022 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி அருகே உள்ள வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவிலில் சிவன், பார்வதி திருக்கல்யாண உற்சவம், வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பழ வகைகளுக்கு பதிலாக விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகள் நெற்கதிர்கள் உள்ளிட்டவை சீர்வரிசையாக கொண்டுவரப்பட்டன.
புதுச்சேரி திருக்கனுாரை அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் ஐயப்பனாரப்பன் கோயிலில் ஊரணி பொங்கலுடன் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, மதியம் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு, கோவில் வளாகத்தில், சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, வித்தியாசமான முறையில், பழ வகைகளுக்கு பதிலாக, நேரடியாக கிடைக்கக் கூடிய தேங்காய், மாங்காய், எலுமிச்சை, கொய்யா, நெற்கதிர், நுங்கு, வாழைக்காய், நார்த்தங்காய், பப்பாளிக்காய், ஈச்சங்காய் உள்ளிட்டவை சீர்வரிசை தட்டில் வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.