திருப்பதியில் பெய்த கனமழையால், மலைப்பாதையில் மண்சரிவு - பாறைகள் மற்றும் மரங்களும் விழுந்ததால் போக்குவரத்துக்கு தடை
Dec 1 2021 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதியில் பெய்த கனமழையால், மலைப்பாதை சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டதோடு பாறைகளும், மரங்களும் விழுந்துள்ளன. இரண்டாவது மலைப்பாதையில், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மலை பாதையில் ஆங்காங்கே பாறை சரிவுகள் ஏற்பட்டன. திருமலை இடையே வாகன போக்குவரத்தை நிறுத்தி வைத்த தேவஸ்தானம், தற்காலிகமாக சரி செய்து மீண்டும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது. இந்நிலையில், திருமலைக்கு வாகனங்கள் செல்வதற்காக பயன்படுத்தப்படும் இரண்டாவது மலைப்பாதையில் ஓரிடத்தில் திடீரென்று பாறை சரிவு ஏற்பட்டதால், மரங்கள் சாலையில் சரிந்து விழுந்தன. சில இடங்களில் சாலையில் வெடிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டுமென்றாலும் பள்ளத்தில் சரிந்து விடலாம் என்ற அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திருப்பதி - திருமலை இடையே வாகனங்களில் பயணிக்கும் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.